Tuesday, September 15, 2009

ராணா தாஸ்குப்தாவின் கிளிகளும் எஸ்.ராமகிருஷ்ணனும்


ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். உன்னதம் ஸ்டால் போட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டு நேராக என்னைத் தேடிவந்து விட்டார். அவர் வருவது தெரிந்ததும், அந்தச் சந்திப்பைத் தவிர்த்தவாறு சட்டென்று மறைந்து போய்விட்டேன். பனிப்போரின் பல்வேறு சங்கடங்கள் எனக்குள் இருந்தன. அவர் என்னைத் தேடிப் பார்த்து விட்டு வேறு ஸ்டால்களுக்குப் போய்விட்டார். பிறகு நான் ஸ்டாலுக்குத் திரும்பி வந்து உட்கார்ந்திருந்தபோது, தோளின் மீது ஒரு கரம், “சித்தார்த்தன்...” திரும்பிப் பார்த்தால்... எஸ்.ரா. சட்டென்று இறுக்கம் விலகி மனசு நெகிழ்ந்து போயிற்று. ஒருகணத்தில் கட்டுக்கடங்கா எண்ணஓட்டங்கள் உள்ளோடிச் சுரந்தன. பிரியமுடன் அவரது கை பற்றினேன்.
புற வெளியில் பேசப்பட்ட சொற்கள் ஒருபுறம், அகவெளியில் பேசப்படாத உணர்வுகள் மறுபுறமாக நகர்ந்து கொண்டிருந்தோம்.
அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, சமீபத்தில் படித்த நல்ல நாவல் குறித்துச் சொல்லுங்கள் என்றேன். ராணா தாஸ்குப்தாவின் ஸோலோ என்கிற நாவல் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசினார். நாவலின் கதைத்தளம் குறித்து விரிவான விளக்கத்துடன் அவர் பேசப்பேச, என் அக்குளில் சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன.
அருகி மறைந்து கொண்டிருக்கின்ற மொழிகளைக் காத்துச் சேகரிக்கும் ஒருவர், தன்னிடமுள்ள 20 கிளிகளுக்கு இது போன்ற 20 அபூர்வ மொழிகளைக் கற்றுக் கொடுக்கிறார். பிறகு அந்தக் கிளிகளுடன் கப்பலில் பயணம் ஆகிறார். நடுக்கடலில் கப்பல் உடைந்து கிளிகள் கூண்டிலிருந்து வெளியேறிப் பறந்து விடுகின்றன.
அதன்பிறகு நாவலின் மேஜிக்கல் ரியலிஸம் ஆரம்பிக்கிறது. அந்தக் கிளிகள் என்னவாயின? அந்தக் கிளிகளுக்குள் உள்ள மொழிகளின் நிலை என்ன? இப்படிப் பல்வேறு புதிர்வழிச் சுழல்களுடன் நாவல் தளம் நகர்கின்றது. இதுமட்டுமல்லாமல் கூடவே பல்கேரிய அரசியல் பின்னணியும் நகர்கின்றது...
என்று எஸ்.ரா. அவருக்கே உரித்தான சொற்களில் சொல்லச் சொல்ல எனக்கு அன்று இரவு உறக்கமில்லை.
கூகுளின் உதவியுடன் ராணா தாஸ்குப்தாவின் மாந்திரீக யதார்த்தவாத உலகம் தீராத பக்கங்களுடன் திறந்து கொண்டது.
இந்த வருட புக்கர் பரிசுக்கான பட்டியலில் இந்நாவல் 7 வது இடத்தில் உள்ளது. நவீன தமிழ் வாசகனுக்குச் சற்றே அறிமுகமான முக்யமான நாவலாசிரியர் ஏ.எஸ்.பைட் 21 வது இடத்தில் உள்ளார்.
மார்க்வெஸ்ஸின் ஒரு நூற்றாண்டு வருடத்துத் தனிமையின் மேஜிக்கல் ரியலிஸம் ராணாவை பெரும் பாதிப்பேற்படுத்தியிருக்கிறது என்பதை இந்த நாவலுக்கு வந்துள்ள விமர்சன மதிப்புரைகளை வைத்துப் புரிந்து கொண்டேன்.
அவருடன் உரையாட வேண்டும் என்ற எண்ணம் கட்டுக்கடங்காமல் அலைந்தது. சட்டென்று Face Book குக்குப் போய் அவரது மின்னஞ்சல் முகவரி பிடித்து ஒரு அஞ்சலைத் தட்டி விட்டேன்.
மிகச்சரியாக 23 நிமிடங்கள். முழுசாக வந்து சேர்ந்தது பதில். தமிழ் எழுத்தாளத் திலகங்கள் ஏற்படுத்தியிருந்த பாதிப்பில் நான் ஒரு கணம் விக்கித்துப் போனேன்.
அவரது நாவல் குறித்து உன்னதம் இதழில் எழுதுவதாகவும், இயலும் பட்சத்தில் அவர் ஒரு நேர்காணல் தரமுடியுமா என்றும் வினவினேன்.
உடனே கேள்விகளை எழுதி அனுப்புங்கள் என்றார். எனக்குப் பதட்டம் எகிறியது.
எனது டெல்லி நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்பி அவரது ஸோலோ நாவலை வாங்கி நண்பர் மோகன ரவிச்சந்திரனிடம் கொடுத்து, உடனே ஒரே மூச்சில் முழுக்கப் படித்து விமர்சன பூர்வமான கேள்விகளைத் தயார் செய்யுங்கள் என்று ஒப்படைத்தேன்.
இரண்டு நாட்களில் கேள்விகள் தயார்.
அடுத்த 24 வது மணி நேரம் பதில்கள் வந்து சேர்ந்தன.
ஒரு சீரிய பத்திரிக்கைக்குத் தேவை இதுதானே...
சென்னையிலிருந்துதான் ஒரு பத்திரிக்கை நடத்த வேண்டும் என்கிற பிம்பத்தை இந்த இதழ் முற்றாக உடைத்தெறிந்திருக்கிறது. உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிப் போய்விட்டது என்பதை நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் நம் வாழ்வில் பங்கு கொண்டபடி சொல்லிப் பொகின்றன.
எதற்காகச் சென்னை மாநகரத்துக்குப் போகவேண்டும்? ஆலத்தூர் என்னும் வரப்பட்டிக்காட்டின் வெளியிலும் ராணா தாஸ்குப்தாவின் கிளிகள் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. எஸ்ராவுக்கு நன்றி சொல்லியவாறே நானும் அவைகளுடன் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்...